Aug 16, 2007

பாரான் மலையில் அக்னி பிரமாணம்

பாரான் மலையில் அக்னி பிரமாணம்
ஜி.என்


இஸ்மவேலை கர்த்தர் ஆசிர்வத்தார் என்பது அவரது சந்ததியில் உருவாகப்போகும் ஒரு உலகப் புரட்சியின் அடையாளத்தைக் குறிக்கும் என்று சொல்லி வருகிறோம்.


அந்த உலகப் புரட்சிக்கு வித்திட்டவர் தான் இஸ்மவேலின் வம்சத்தில் வந்த தீர்க்கதரிசி முஹம்மத் அவர்கள்.

முஹம்மத் பற்றியத் தகவல்களே அனேக கிறிஸ்த்தவர்களுக்கு எட்டவில்லை. ஓரளவு தெரிந்துள்ளவர்கள் கூட ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ள தப்பும் தவறுமான அந்தக் கருத்தையே கொண்டுள்ளார்கள். அதையே பிற மீடியாக்களில் பிரதிபளிக்கின்றார்கள்.

உலகில் எத்துனையோ தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கின்றோம். அந்த மனப்பான்மையில் முஹம்மத் அவர்களின் வரலாற்றைப் படித்தால் கூட போதும். அங்கு அவர்களுக்கு அதீத உண்மைகள் விளங்கி விடும்.

மரியாளைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் குர்ஆன் ஏன் இவ்வளவு விரிவாக பேசுகின்றது என்பதை சிந்திக்கத் துவங்கினால் அருகருகே வாழ்ந்த இஸ்மவேல் - இஸ்ரவேல் சந்ததிகளின் வாழ்க்கையோட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், விளைவுகள், கிறிஸ்த்தவக் கொள்கையை மறுப்பதற்கான காரணங்கள் என்று அனேக ஆய்வுக் களங்கள் அங்குத் தென்படும்.

அந்தப் பயணத்திற்காக அவர்களை அழைக்கின்றோம். அதற்கு வழிகாட்டும் பைபிள் வசனங்களில் இரண்டை உங்கள் பார்வைக்கு வைத்து தொடர்கின்றோம்.

தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையு முன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசிர்வதித்த ஆசிர்வாதமாவது.

கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது. உபாகமம் 33:1.2

பரிசுத்தர் பாரான் மலையிலிருந்தும் வந்தார். ஆபகூக் 3:3

பைபிளில் குறிப்பிடப்படும் இந்த இரண்டு வசனங்களில் 'பாரான் மலை' ப்பற்றிப் பேசப்படுகின்றது.

'கர்த்தர் பாரான் மலையில் எழுந்தருளி' என்று உபாகாமமும், 'பரிசுத்தர் பாரான் மலையிலிருந்து வந்தார்' என்று ஆபகூக்கும் கூறும் இந்த பாரான் மலைப்பற்றியும், அங்கு தோன்றிய தீர்க்கதரிசிப் பற்றியும் பார்க்க வேண்டும்.

''தேவன் பிள்ளையுடன் இருந்தார். அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான்.

அவன் பாரான் வராந்தரத்திலே குடியிருக்கையில் அவனுடைய தாய் எகிப்து தேசத்தாலாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம் பண்ணி வைத்தாள்''. (ஆதியாகமம் 21:10 முதல் 21:21வரையுள்ள வசனங்கள்)

பாரான் வனாந்தரத்தில் குடியிருந்த ஆகார் மற்றும் இஸ்மவேல் அவர்களின் வாழ்க்கை இறுதி வரை அதேப் பகுதியில் கழிகின்றது. இஸ்மவேல் அந்தப் பகுதியில் வைத்துதான் எகிப்து தேசத்துப் பெண்ணையும் திருமணம் செய்கின்றார். அவரது சந்ததிகள் அங்குதான் தோன்றுகின்றன.

இப்போது கவனமாக பாருங்கள்.

'கர்த்தர் சீனாய் மலையில் எழுந்தருளி' என்பது சீனாய் மலையில் வைத்து மோசே அவர்களுக்கு வேதம் வழங்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது. அதன் பின் கர்த்தர் பாரான் மலையில் பிரகாசித்தார் என்று வருகின்றது.

மோசேக்கு வேதம் (கட்டளைகள்) வழங்கப்பட்ட பிறகு பாரான் மலையில் கர்த்தரின் பிரகாசம் வரவேண்டும். மோசேயின் காலத்திலிருந்து இயேசுவின் காலம் வரை எத்துனையோ தீர்க்கதரிசிகள் தோன்றியுள்ளனர். அவர்களில் ஒருவரும் பாரான் மலையில் தோன்றியதாகக் கூறப்படவில்லை. இஸ்மவேலர்களில் தோன்றியதாகவும் கூறப்படவில்லை. மோசேமுதல் இயேசுவரை வந்த தீர்க்க தரிசிகள் இஸ்ரவேலர்களில் தான் தோன்றியுள்ளனர்.

இயேசுவின் காலம் வரை பாரான் மலையிலிருந்து கர்த்தரின் பிரகாசம் தோன்றவில்லை என்றால் இயேசுவிற்கு பின் வெகு நிச்சயமாக அந்தப் பிரகாசம் தோன்றியாக வேண்டும். இல்லையெனில் மோசேயின் ஆசிர்வாதம் பொய்யாகி விடும்.

முஹம்மத் அவர்கள் இஸ்மவேலின் வம்சத்தில் தோன்றியவர்கள். பாரான்மலை (ஹிரா மலை) உள்ள மக்காவில்தான் அவர்கள் பிறந்தார்கள். பாரான் மலையிலிருந்து... என்ற வாசகத்திற்கு ஒப்ப பாரான் - ஹிரா மலையில் இருக்கும் போதுதான் அவர்கள் தீர்க்கதரிசியாக அறிவிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு முன்பும் - பின்பும் இஸ்மவேல் சந்ததிகளில் யாரும் தன்னை தீர்க்கதரிசி என்று வாதிட்டதில்லை என்ற வரலாறை ஊன்றி கவனித்தால் கர்த்தரின் பிரகாசம் பாரான் மலையில் தோன்றியது என்ற மோசேயின் ஆசிர்வாதம் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பே என்பதை சந்தேகமின்றி விளங்கலாம்.

மட்டுமின்ற, அந்த அறிவிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்களை இன்னும் ஊன்றி கவனித்தால் முஹம்மத் பற்றிய முன்னறிவிப்பு இன்னும் ஆழமாக விளங்கும்.

கர்த்தரின் பிரகாசம் பாரான் பிரதேசத்தில் தோன்றும் என்று இல்லாமல் பாரான் மலையில் தோன்றும் என்று கூறப்படுகின்றது.

பாரான் மலையில் வைத்தே முஹம்மத் அவர்களுக்கு முதலாவது வேத வசனங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த வேதத்தின் வாசகங்களில் அறிவு பிரகாசம் இருந்தது.

இன்னும் கவனியுங்கள்.

பரிசுத்தர் பாரான் மலையிலிருந்து வந்தார் என்று ஆபகூக் கூறுகின்றது. முஹம்மத் அவர்கள் பாரான் மலையில் இருந்த போதுதான் கேப்ரீல் (ஜிப்ரீல்) என்ற தேவதூதர் முஹம்மதிடம் வந்து வேத வசனங்களை வெளிபடுத்தினார். கேப்ரீலை இஸ்லாம் பல்வேறு இடங்களில் 'அவர் பரிசுத்தர்' என்று சொல்லிக் காட்டுகின்றது.

பரிசுத்தமான தேவத்தூதரான கேப்ரீல் பிரகாசமான வேத வசனங்களுடன் முஹம்மத் அவர்களை பாரான் மலையில் சந்தித்தார் என்பதை சிந்திக்கும் போது முஹம்மத் பற்றிய முன்னறிவிப்பின் எதார்த்த் தெளிவாக தெரியும்.

பாரான் மலையிலிருந்து தோன்றும் தீர்க்கதரிசிக்கு அக்கினிமயமான பிரமாணத்தை கர்த்தர் தம் வலக்கையால் வழங்குகிறார்.

அக்கினிமயமான பிரமாணம் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்த்தவர்கள் அடிக்கடி சொல்லி வரும் 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு' என்ற கொள்கைக்கு மாற்றமான மனித உரிமைகளை மிக சரியாக பாதுகாக்கும் குற்றவியல் சட்டங்களைக் கொண்ட வேதமே முஹம்மத் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அரசு அமைத்து, அரசியல் சாசன சட்டத்தை வகுத்து குடிமக்களின் அமைதியான வாழ்விற்கு வழிவகுத்தது இஸ்லாம். இஸ்லாத்தின் அரசியல் குற்றவியல் சட்டங்களில் கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் என்ற அக்கினி பிரமாணம் இருக்கின்றது. மனித உரிமைக்கு எதிராக ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடினமான தண்டனையை அரசு வழங்க வேண்டும். சம்மந்தப்பட்டவர்கள் (பாதிப்பை ஏற்படுத்தியவரும் - பாதிப்புக்குள்ளானவரும்) சமரசம் செய்துக் கொள்ளாத பட்சத்தில் குற்றவாளிக்கு எவ்வித சலுகையும் அரசு தரப்பிலிருந்து வரக்கூடாது. தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும் போன்ற (குற்றவாளிகளுக்கு கடினமாகவும் - பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாகவும்) உள்ள சட்டங்களையே கேப்ரீல் தேவன் புறத்திலிருந்து முஹம்மதுக்கு வழங்கினார்.

இது அன்றைக்கிருந்த குற்றங்களை இழைத்து பழகிப்போன, அதையே வாழ்க்கையாக கருதிக் கொண்டிருந்தவர்களுக்கு 'அக்கினி'யாகவே தெரிந்தது.

இந்த அளவிற்கு மோசேயின் ஆசிர்வாதம் முஹம்மத் அவர்களாலேயே - கேப்ரீல் - பரிசுத்தர் கொண்டு வந்த - கர்த்தரின் அக்னி பிராணமத்தாலேயே நிறைவேறியது.

பைபிளை வேதம் என்று நம்புபவர்கள் அந்த நம்பிக்கையில் உறுதியாக இருந்தால் உபாகபமம் - ஆபகூக் ஆகமங்களின் வசனத்தை சிந்தித்தால் இஸ்மவேலின் வம்சத்தில் - பாரான் வனாந்தரத்தில் தோன்றி - பாரான் மலையிலிருந்த போது கர்த்தரின் வேத வசனங்களைப் பெற்று தீர்க்கதரிசியாகி தேவனுக்காக உழைத்த முஹம்மத் அவர்களின் பக்கமும் அவர்கள் கொண்டு வந்த வேதமாகிய குர்ஆனின் பக்கமும் முகம் திருப்புவார்கள்.

முஹம்மத் அவர்கள் குறித்து இன்னும் பல முன்னறிவிப்புகள் பைபிளில் இருந்தாலும் அவற்றை நாம் இங்கு எழுதப்போவதில்லை. இது இஸ்மவேலின் வரலாற்றை கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்ட அவரையும், ஆப்ரகாம் - இஸ்மவேல் இருவரும் கர்த்தரிடம் வேண்டிக் கொண்ட (குர்ஆன்) படி பாரான் மலையில் வெளிபட்டவற்றையும் எடுத்துக் காட்டவே இந்தக் கட்டுரை.

இயேசுவின் வாழ்க்கை வரலாறு தொடருக்கு அவர்கள் எழுதும் மறுப்பின் நிலவரங்கள் தொடர்ந்து அலசப்படும் தேவன் நாடட்டும்.

......................................................................................................................................................................

நமக்கு மறுப்பளித்து வரும் சகோதரர் கடந்தக் கட்டுரைக்கு இரண்டு பாகங்களாக மறுப்பு அல்லது பதில் அளித்துள்ளார். அந்தக் கட்டுரைகளுக்கான தொடுப்பை கீழே கொடுத்துள்ளோம். வாசகர்கள் அந்தக் கட்டுரைகளை அவசியம் படிக்க வேண்டும். நமது வாதங்களுக்கு அவர்களின் பதில் எந்த விதத்தில் உள்ளது என்பதை உங்களால் அங்கு கண்டுக் கொள்ள முடியும்.
குர்ஆன் வசனத்தை மாற்றும் இதுதான் இஸ்லாம் - 2

.......................................................................................................................................................................

1 comment:

மஸ்தூக்கா said...

பாரான் மலையில் அக்கினிப் பிரமானம் குறித்து தாங்கள் எழுதியவை மிகவும் சிந்திக்கத் தக்கவை. அன்புக் கிறிஸ்தவச் சகோதரர்கள் சிந்திப்பார்களா? நொண்டியை நடக்க வைப்பதாகவும் குருடனைப் பார்க் வைப்பதாகவும் தங்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து விடுதலை பெறுவார்களா?