Aug 3, 2007

ஹாட் லைன் (HELP LINE)

ஹாட்லைன் நியூஸ் (hot line)
முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரீன்.
துபாய், அபுதாபி, அஜ்மான், ராஸ்அல்கைமா, ஷார்ஜா, உம்மல்குய்ன், ஃபுஜைரா போன்ற வளைகுடா மாகாணங்களில் வீட்டுபணிப்புரியும் பெண்கள் (House Maids) பல மாதிரியான இன்னல்களுக்கும், தொல்லைகளும் மற்றும் பல பிரச்சனைகளுக்கும் ஆளாகி வருகிறார்கள். தாயகத்திலிருந்து வரும் போது முகவர்கள் (Agent) அதிகமான சம்பளம் என்று ஆசை வார்த்தை காட்டுகிறார்கள். ஆனால் துபாய்க்கு வந்தால் அவர்கள் சொன்னதை விட சம்பளம் குறைவாக தான் இருக்கும். இருந்தாலும் வந்தாச்சு.. என்ன செய்வது.. பெற்றோர்களை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் பல பெண்கள் இருக்கிறார்கள்.
வளை குடா நாடான துபாயில், இலங்கை நேபாளம் பிலிப்பைன்ஸ் இந்தோனேஷியா மற்றும் இந்தியா நாட்டைச் சார்ந்த வீட்டுபணிப்பெண்கள் அதிகளவில் உள்ளார்கள். இங்கு வேலை செய்யும் வீட்டுபணிப்பெண்களுக்கு பணி நேரங்கள் (Duty Times) மற்றும் பணி காலங்கள் என்பது கிடையாது. அத்துடன் விடுமுறை நாட்கள் (Holidays) என்பதும் கிடையாது. விடுமுறை நாட்களில் தான் அவர்களுக்கு அதிகமான வேலைகள் இருக்கும் என்பதும் இங்கு குறிப்பித்தக்கது. மற்றும் இரவு பகல் என்று எந்த நேரத்திலும் வேலைகள் இருந்துக்கொண்டே இருக்கும். அதனை அவர்கள் அந்த நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். ஏனெனில், அடுத்த அடுத்த வேலைகள் அவர்களுக்காக தயாராக இருக்கும். வேலையில் ஏதேனும் சிறிய தவறுகள் ஏற்பட்டால் வீட்டுக்காரரிடம் (Sponsership) திட்டு வாங்க வேண்டும். இல்லையென்றால் அவரின் மனைவி(மார்)களிடம் ஏச்சும் பேச்சும் வாங்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்களின் பிள்ளைகளிடம் வாங்கி கட்டி கொள்ள வேண்டும். சில நேரங்களில் அரேபியர்களிடம் அடி, உதை பட்டு சிகரெட் நெருப்பால் சூடு வாங்கிக்கொண்ட பல பெண்கள் இருக்கிறார்கள். இது போல் பல சம்பவங்கள் இங்கு நடைபெறுகின்றன. அதனை இங்குள்ள நாளிதழ் செய்தியாக வெளியிடும். அதனை துபாயில் உள்ள சகோதர உள்ளங்கள் படித்து அறிந்து இருப்பார்கள்.
பல பெண்கள், தான் பணிபுரியும் வீட்டில் அவர்களுக்கு நடைபெறும் கொடுமைகளையும் மற்றும் உள்ள துன்பங்களை பற்றியும் வெளி நபரிடம்; சொல்ல தயங்குகிறார்கள். சொன்னால் அவர்கள் நம்மை வீட்டை விட்டு துரத்தி தாயகத்திற்கு அனுப்பி வைத்து விடுவார்களோ..!..? என்ற பயத்தால் அவர்கள் அதனை சொல்லாமல் மறைத்து வைத்து விடுகிறார்கள். இதனால் மனமுடைந்த போன எத்தனையோ வீட்டுபணிப்பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் நாட்டைச்சார்ந்தவர்களை இன்றைக்காவது கண்டால் நடக்கும் சம்பவங்களை கூறுகிறார்கள். அதனைக்கேட்கும், அவர்கள் அவர்களால் முடிந்த உதவிகளையும் மற்றும் ஆலோசனைகளையும் செய்கிறார்கள் மற்றும் சொல்கிறார்கள்.
அஜ்மான் என்ற மாகாணத்தில் இந்தியாவைச்சார்ந்த வீட்டுபணிப்பெண் (சில தவிர்க்க முடியாத காரணத்தினால் பெயர் குறிப்பிடப்பட வில்லை) ஒருவர், அவர் பணிபுரியும் வீட்டில் வீடியோ கேமரா, மோபைல் போன், மற்றும் வீட்டிலுள்ள தங்க நகைகளை திருடி விட்டாள் என்பதற்காக அஜ்மான் மத்திய சிறைச்சாலையில் (Ajman Central Jail) ஒரு வருடம் காலம் சிறைத்தண்டனை அனுபவித்தார். கோர்ட் வழக்கு என்று இன்று வரை இழுத்துக்கொண்டு செல்கிறது. இது போல் குற்றங்களை சுமந்துக்கொண்டு இருக்கும் பற்பல நாட்டைச் சார்ந்த வீட்டுபணிப்பெண்களும் இங்கு இருக்கிறார்கள். இவர்கள் சிறிய தவறு செய்தாலும் அதனை பெரிதாக்கி இங்குள்ள அரேபியர்கள் காவல் துறை வரை சென்று தண்டனை வாங்கி கொடுக்கிறார்கள்.
இந்தியாவின் அண்டைய நாடான இலங்கையை சார்ந்த பெண்கள் 13 பேர்கள் தற்போது, இலங்கை தூதரகத்தின் காப்பகத்தில் (Safe House) தங்கி இருக்கிறார்கள். அங்கு தங்கி இருக்கும் பெண்களில் ஒருவரான சாந்தினி (பெயர் மாற்றம்) என்பவர் கூறுகையில், நான் பணிபுரிந்த வீட்டில் என்னை துன்பப்படுத்தினார்கள். துயரத்தில் ஆழ்த்தினார்கள். எனக்கு பல கொடுமைகளை தந்தார்கள். இவர்களின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக வேண்டி, நான் பணி புரியும் வீட்டிலிருந்து ஒடி வந்து தற்போது காப்பகத்தில் உள்ளேன். மற்றொரு பெண்ணான கௌரி (பெயர் மாற்றம்) என்பவரின் கூற்றுப்படி, நான் அறு மாத முன்பு தான் இலங்கையிலிருந்து வந்து இங்குள்ள அரேபியர் ஒருவர் வீட்டில் வேலை செய்தேன். அவர்கள் என்னை அடித்தார்கள், திட்டினார்கள், நெருப்பால் சூடுப்படுத்தினார்கள். அங்கு என்னால் இருக்க முடியவில்லை. ஆகையால் தெரிந்தவர்கள் சொன்னதால் நான் இங்கு தூதரக காப்பகத்தில் உள்ளேன்.
இலங்கை தூதரக அதிகாரியான திரு. வாஷந்த சேனாநாயக்க(Mr. Wasantha Senanayake - Consul General (CG) of Sri Lanka) அவர்கள் குறிப்பிடுகையில், எங்கள் நாட்டைச் சார்ந்த வீட்டுபணிப்பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை தடுக்கவும், மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு தரவும் இலங்கை அரசு அதன் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. இந்த 13 பெண்கள் அனைவரும் சென்ற மாத ஜீன் மாத இறுதியிலும் மற்றும் ஜீலை மாத துவக்கத்திலும் தூதரக காப்பகத்திற்கு அடைக்கலமாக வந்து உள்ளார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகளை மற்றும் ஆலோசனைகளையும் நாங்கள் வழங்குகிறோம் என்றார். மேலும், ஜனாப். முஹம்மத் நபவி ஜீனைத் ((Janab. Mohammad Nabavi Junaid – Ambassador of Sri Lanka to the UAE) அவர்கள் குறிப்பிடுகையில், இலங்கை நாட்டைச்சார்ந்த வீட்டுப்பணிப்பெண்கள் வளை குடா மாகாணங்களில் பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். இவர்களுக்கு பாதுகாப்பினை தரும் பாதுகாப்பு மையங்கள் வளைகுடா நாடுகளில் பல உள்ளன. இவற்றில் உள்ள அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவதற்கும், நன்றாக பராமரிக்கவும் ஆவணத்தினை இலங்கை அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்கிறார்.
துபாயில், இலங்கைச்சார்ந்த வீட்டுபணிப்பெண்களின் மாத வருமானம் குறைந்த பட்சம் UAE DHS 550 (ஒரு திர்ஹம் இந்திய மதிப்பின் படி ரூபாய் 12.00, இலங்கையின் மதிப்பின் படி 20.00) கட்டாயமாக இருக்கப்பட வேண்டும் என்று இலங்கை ஊடகலியாளர் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சகத்தினைச சார்ந்த திரு. அனுரா பிரியதர்ஷனாயாபா (Mr. ANURA PRIYA DARSHANA YAPA – THE SRIN LANKAN MINISTER OF MASS MEDIA AND INFORMATION) அவர்கள் கூறி உள்ளார். இத்தகைய குறைந்த பட்ச சம்பளத்தினை அனைத்து வளைகுடா நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்பதினை வலியுறுத்த போவதாகவும் இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
வளைகுடா நாடுகளில் நடக்கும் கொடுமைகளிலிருந்து, இந்திய நாட்டைச்சார்ந்த பெண்களை மீள வைக்க வேண்டியும் மற்றும் ஆலோசனை சொல்ல வேண்டியும், இந்திய அரசாங்கமானது 24 மணி நேர சேவை வசதி (Help Line) ஒன்றினை செய்ய தயாராக உள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளரான திரு. நிர்மல் சிங் (Mr. Nirmal Singh – Ministry of Overseas Indian Affairs – (MOIA) அவர்கள், துபாயிலிருந்து வெளிவரும் (Khaleej Times) என்ற ஆங்கிலப்பத்திரிகைக்கு இந்திய தலைநகர் டில்லியிலிருந்து தொலை பேசி மூலமாக ஆற்றிய உரையில் இவ்வாறு கூறி உள்ளார். துபாயில் வீட்டுபணிப்பெண்களுக்கு எதிராக பல இன்னல்கள் நடைபெறுகின்றன. அவற்றினை பற்றி அறிய வேண்டி, இந்திய அரசு இச்சேவையினை வரும் செப்டம்பர் முதல் தேதி அன்று துவங்க உள்ளதாக இருக்கிறது. இங்குள்ள வீட்டுபணிப்பெண்கள் தயக்கம் இல்லாமல் இச்சேவையினை பயன்படுத்தலாம் என்று அவர்கள் மேலும் குறிப்பிடுகிறார்கள். மற்றும் பல இன்னல்களுக்கு ஆளாகும் அடிப்படைத் தொழிலாளர்களும் மற்றும் பிரச்சனைகளை எதிர் நோக்கும் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் இச்சேவையினை பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.
மேலும், இந்திய தூதரகத்தின் மேலதிகாரியான திரு. வேணு ராஜமோனி (Mr. VENU RAJAMONY – Consulate General of India in Dubai) அவர்களும் இதே கருத்தினை வலியுறுத்துவது போல் கூறி இருக்கிறார். இந்திய நாட்டைச்சார்ந்த வீட்டுபணிப்பெண்களும் மற்றும் அடிப்படை தொழிலாளர்களும் பிரச்சனை ஏற்பட்டால் (00971) – 050 – 9433111 என்ற அலைபேசி எண்ணை தொடர்புக்கொண்டால் போதும் நாங்கள் நேரிடையாக அவர்களிடம் தொடர்புக்கொண்டு பிரச்சனைகளை பற்றி விசாரித்து நல்ல தீர்வினை தருவோம் என்கிறார். மேற்குறிப்பிட்ட அலை பேசி (Mobile No) எண் தொழிலாளர்களின் வசதிக்காக Hot line எண்ணாகவும் எப்போது செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேற்குறிப்பிட்ட இரு அதிகாரிகளின் கருத்துக்களானது, வளைகுடா நாடுகளில் பல கொடுமையினை நாள் தோறும் சந்திக்கும் பல இந்திய தொழிலாளர்களின் நெஞ்சங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. மேலும் இந்திய நாட்டின் இத்தகைய சேவையினை காணும் மற்றைய நாடுகளும், அவற்றின் தூதரங்களும் அந்தஅந்த நாட்டைச்சார்ந்த தொழிலாளர்களுக்கு மற்றும் வீட்டுப்பணிப்பரியும் பெண்களுக்கும் பல உதவிகள் செய்ய தயாராகி விட்டன.
சமீபத்தில், வளைகுடா நாடுகளில் ஒன்றான மஸ்கட்டில் 7 இந்திய தொழிலாளர் சம்பள பிரச்சனை மற்றும் உள்ள பிரச்சனைகளை பற்றி பேசியதற்காக, அங்குள்ள அரேபியர் ஒருவரால் வீட்டுக்காவலில் ஒரு வாரம் வரை சிறைப் பிடிக்கப்பட்டனர். அவர்கள் தாயகத்திலிருந்து வரும் போது மாத சம்பளம் 150 - OMR (Oman Muscat Riyal) (இந்திய மதிப்பின் படி 17,000) என்று பேசப்பட்டது. ஆனால் மஸ்கட்டில் அவர்களுக்கு கொடுக்கப்பட்டதோ வெறும் 50 – OMR மட்டுமே, ஆகையால் அவர்கள், பணி கொடுத்த நிறுவனத்திடம் இதனைப்பற்றி முறையீட்டார்கள். ஆனால் அது பற்றி அவர்கள் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. மற்றும் 4 மாதங்கள் சம்பளமும் கொடுக்கவில்லை. நாங்கள் வேலை செய்ய முடியாது, எங்களை உடனே தாயகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் சொன்னார்கள். ஆனால் அவர்களை தாயகத்திற்கு அனுப்பாமல் மஸ்கட்டிலிருந்து 10 கீ.மீ தூரம் உள்ள (Muscat – Haseet – Near Buraimi – Border- Al Ain) உள்ள ஒரு வீட்டில் அரேபியரால் பூட்டி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் ஒரு வாரம் வரை குடிப்பதற்கு தண்ணீர் மற்றும உண்ண உணவு இன்றி தவித்தார்கள். நண்பர் ஒருவர் மூலமாக இந்திய தூதரகத்தினை அணுகி அவர்களின் குறைகளை சொன்னார்கள். அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அவர்கள் செய்தனர்.
செய்தி : Khaleej Time – 24.7.2007 kw;Wk; 25.7.2007 News Papers
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :'திண்ணமாக இவ்வுலகம் இனிமையாகவும் பசுமையாகவும் இருக்கின்றது. இங்கு நீங்கள் எவ்வாறு செயல்டுகிறீர்கள் எனச் சோதிக்கவே வல்ல இறைவன் இவ்வுலகில் உங்களுக்கு பிரதிநிதித்துவ அந்தஸ்தை (கிலாஃபத்தை) வழங்கியிருக்கின்றான்'அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரி (ரலி)ஆதாரம் : முஸ்லிம்
அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கியிருக்கின்ற அருட்கொடைகளுக்கு அவர்கள் உரிமையாளர்கள் அல்லர். மாறாக, அல்லாஹ்வே அவற்றின் உண்மையான உரிமையாளன் ஆவான். மனிதர்களுக்கு இவ்வுலகில் பிரதிநிதித்துவ அந்தஸ்து மட்டுமே அவன் வழங்கியிருக்கின்றான். மனிதர்களின் பணி இதுவே, இறைவன் தமக்கு வழங்கியுள்ள பொருள்கள், வசதிகள், ஆற்றல்கள் ஆகிய அனைத்தையும், உண்மையான உரிமையாளனான – அல்லாஹ்வின் விருப்பப்படியே அந்தக் கொடைகள் பயன்படுத்தப்பட வேண்டும். அவனுடைய உவப்பையே அடைவதற்கு இந்தச் சாதனங்களை மனிதன் பயன்படுத்த வேண்டும்.

No comments: